வெள்ளி, 18 நவம்பர், 2016

5S முறைமை

இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது பேரழிவுகளைச் சந்தித்து சுடு காடாக மாறிய யப்பான், மிகக் குறுகிய காலத்திற்குள் எழுச்சிகொண்டு, உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் அளவுக்கு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் உயர் தொழினுட்பத்திறன் மிக்க நாடாக, கிழக்காசியாவின் மையமாக யப்பான் விளங்குகின்றது.
யப்பானுக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. மேலைத் தேசத்தவரின் ஆட்சிக்கெதிராகப் போரிட்டு வெற்றியடைந்து சுதந்திர தேசிய அரசினை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிலை நாட்டிய ஆசிய நாடென்ற பெருமை அதனைச் சாரும்.
அதனுடைய உற்பத்திப் பொருட்கள் சர்வதேச சந்தையில் அதிக கேள்வியுடையவையாகக் காணப்படுகின்றன.
முறையான திட்டமிடலும், ஓய்வின்றிய உழைப்புமே யப்பானின் அதீத வளர்ச்சிக்குக் காரணமாகும். யப்பானியர்கள் நேரத்தைப் பொன்னாக மதிப்பவர்கள். அதியுச்ச அளவில் நேரத்தைப் பயன்படுத்துவதற்காக பல்வேறு நடைமுறைகளைப் பயன்படுத்துபவர்கள்.
எவனொருவன் தனது பொருட்களை, அதற்குரிய இடத்தில் ஒழுங்காக வைப்பதற்கு ஒரு நிமிடத்தை செலவளிப்பதற்கு பின் நிற்கிறானோ, அவன் அப்பொருளைத் தேடுவதற்கு ஐந்து நிமிடங்களைச் செலவளிப்பான்என்னும் கருத்தில் யப்பானியப் பழமொழியொன்றும் உள்ளது. யப்பானியர்களின் கணிப்பின்படி 60 வயது வரை வாழுகின்ற ஒரு மனிதன், தன் வாழ்நாளில் ஏறத்தாழ 20 வருடங்களை தனது பொருட்களைத் தேடுவதிலேயே செலவு செய்கின்றானாம்.
நேரத்தின் கட்டுப்பாட்டில் தாம் இயங்காமல், நேரத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் யப்பானியர்கள் வல்லவர்கள். நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும், வாழ்க்கையை இலகு படுத்துவதற்காகவும் இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதே 5S முறைமையாகும்.
5S முறைமை மாதிரியானது யப்பானின் முகாமைத்துவ முறையியலாகும். இதனை டொயோட்டா 5S மாதிரி எனவும் அழைப்பர்.
ஐந்து யப்பானிய வார்த்தைகளால் முன்வைக்கப்பட்டுள்ள இம்முறைமை தரம்மிக்க தூய்மையினைக் குறித்து நிற்கின்றது.
ஆரம்பத்தில் யப்பானிய நிறுவனங்களில் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு வந்த இம்முறையானது பின்னர் யப்பானியர் ஒவ்வொருவரினதும் வாழ்க்கையுடன் இணைந்து, இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதுடன், தற்போது உலகளாவிய ரீதியிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
யப்பான் நாட்டினதும், யப்பானிய நிறுவனங்களினதும் வெற்றிக்கு காரணமாக அமைந்த 5S மாதிரி பின்வரும்  ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

Seiri    
தேவையில்லாதவற்றை அவ்விடத்திலிருந்து அகற்றுதல் - Sort      
Seiton  - 
தேவையானவற்றை தேவையான இடத்தில் வைத்தல் - Systematize
Seiso     -
தூய்மையாக வைத்திருத்தல் - Shine
Seiketsu -
தரப்படுத்தல் - Standardize
Shitsuke -
நிலையான ஒழுக்கம் - Discipline

இம்முறையானது யப்பான் நாட்டுக்கு மாத்திரம் அல்லது யப்பானிய நிறுவனங்களுக்கு மாத்திரம் பொருத்தமானது என்று கருதினால் அது தவறானது. இக்கோட்பாடானது எல்லா நாட்டுக்கும்,எல்லா அலுவலகங்களுக்கும், எல்லாப் பாடசாலைகளுக்கும், எமது வசிப்பிடங்களுக்கும் பொருத்தமானது.
யப்பான் அறிமுகப்படுத்திய இம்முறைமை இன்று உலகளாவிய ரீதியில் அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகள் அனைத்திலும், சிறிய அமைப்புக்கள் முதல் பாரிய அமைப்புக்கள் வரையான நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இலங்கையைப் பொறுத்த வரையில் 5S முறைமையை முதன் முதலாகப் பயன்படுத்தியவர்கள் சில்லறை வியாபாரிகள்தான். 5S முறைமை தொடர்பான எந்தவொரு அறிமுகமோ அறிவோ அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. தமது வியாபார வசதி கருதி, அவர்கள் தமது விற்பனைப் பொருட்களை அடுக்கி வைத்துப் பயன்படுத்திய விதம் யப்பானியர்களின் 5S முறைமையை ஒத்ததாக இருந்திருக்கின்றது.
எமது வியாபாரிகள், சில்லறை வியாபாரி முதல் மொத்த வியாபாரி வரை…… மரக்கறி வியாபாரி முதல் மீன் வியாபாரி வரை……. தங்களை அறியாமலே இம்முறையைப் பயன்படுத்துவதால்தான் அவர்களால் வியாபாரத்தைச் சிறப்பாகச் செய்ய முடிகிறது.
வீட்டை ஒழுங்குபடுத்தும் போது இம்முறையைப் பின்பற்றவோமாயின் எமது வீட்டின் ஒவ்வொரு இடமும் எவ்வளவு அழகாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!
சுவாமியறை,
வரவேற்பறை,
படுக்கையறை,
அடுக்களை,
மாணவர்களின் படிக்கும் அறை,
எத்தனை அழகாக இருக்கும்?
இங்கு ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. தேவையில்லாதவற்றை அகற்றுதல் என்னும் நடைமுறை அல்லது பழக்கம் எம்மவரிடையே, குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ் மக்களிடையே அறவேயில்லை. அறுந்து போன பழைய செருப்புக்களைக் கூடபிறகு பயன்படும்என்று கட்டித் தொங்கவிடும் பழக்கம் உடையவர்களே நாங்கள்! அதற்கேற்றாற்போலசிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும்என்று பழமொழியை வேறு உருவாக்கி வைத்திருக்கின்றோம்.
இரண்டு வருடங்கள் மட்டுமே பாவித்திருக்கக் கூடிய பழுதடைந்த தொலைக்காட்சிப் பெட்டியை   யப்பானியர்கள் இருவர் - கணவனும் மனைவியுமாக - தூக்கி வந்து குப்பை வாகனத்தில் வீசியதை நான் பார்த்து வியந்திருக்கின்றேன்.
அதனால்தான்யப்பானியர்களினால் அந்தப் பழக்கத்தினால்தான் - நுளம்பை சிறுபிள்ளைகளுக்கு காட்ட வேண்டுமாயின், நுளம்பை வளர்க்கும் ஆய்வு கூடங்களுக்கு குழந்தைகளைக் கூட்டிச் செல்ல வேண்டிய நிலையில் யப்பானியர்கள் இருக்கிறார்கள்.
5S முறைமையின் பிரயோகமொன்றை சற்று ஆளமாகச் சிந்திப்போமா?
மனிதன் தனது மூளையில், இந்த ஐந்து விடயங்களையும் பிரயோகிக்க முடியுமாயின் அவனது அறிவு எப்படியிருக்கும்? வாழ்க்கை எப்படி அமையும்? ஆச்சரியப்படுவதற்கு நேரம் இல்லாத அளவுக்கு அவனது சாதனைகள் உலகை வலம் வரும் அல்லவா!
தற்போது இலங்கையின் பெரும்பாலான பாடசாலைகளிலும் இம்முறையானது ஒரு சிறிய மாற்றத்துடன் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 5S முறைமையில் மேலதிகமாக பாதுகாப்பு (Security) எனும் விடயத்தையும் உள்ளடக்கி 6S முறைமை என்னும் பெயருடன் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
பாடசாலைகளைப் பொறுத்தவரையில் பிள்ளைகளின் பாதுகாப்பு மிக முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே இம்மாற்றம் மிக முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் கூட 6S முறைமையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக தேசிய ரீதியில் கல்வி அமைச்சினால் பாடசாலைகளிடையே நடாத்தப்பட்ட போட்டியில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை, யா / கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் தேசிய ரீதியில் பரிசில்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இம்முறையை திட்டமிட்டு சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம்  நாமும் எமது நிறுவன நடவடிக்கைகளையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் இலகுவானதாகவும், அழகானதாகவும், சந்தோஷமானதாகவும் மாற்றிக் கொள்ள முடியும். அதன் மூலம் யப்பானியர்களின் சாதனைகளை எட்டிப்பிடிப்பதற்கான ஆரம்பப் பணியின் முதற்படியில் காலடி எடுத்து வைக்கவும் முடியும்.
தேடலும் ஆக்கமும் :
ம.நிரேஸ்குமார்
ஆசிரிய கல்வியியலாளர்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லுாரி,
கோப்பாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக